அம்பத்தூர் தொழிற்பேட்டையில் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது தண்ணீர் லாரி மோதியதில், தனியார் நிறுவனத்தின் உதவி மேலாளர் உயிரிழந்தார்.
சென்னை, வானகரம் நூம்பல், ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் ராமானுஜம் (34). இவர் அம்பத்தூர் அருகே பாடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை ராமானுஜம் வீட்டிலிருந்து நிறுவனத்துக்கு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டார். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஆம்பிட் பார்க் சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியது. இதில் இரு சக்கர வாகனத்துடன் தூக்கி வீசப்பட்ட ராமானுஜம், லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைப் பார்த்த ஓட்டுநர் லாரியை சாலையில் விட்டு விட்டு தப்பி தலைமறைவானார்.
தகவல் அறிந்து வந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு, உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், போலீஸார் நடுரோட்டில் விட்டு சென்ற லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் வள்ளி தலைமையில் போலீஸார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய லாரி ஓட்டுநர் மணிகண்டனை (53) தேடி வருகின்றனர்.