அணைக்கட்டு அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் உறவினா் உயிரிழந்த வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், வேப்பங்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டியாபட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (36). (படம்). கடந்த 30.6.2008 அன்று குப்சூரில் இறுதிச் சடங்கு நடைபெற்ற வீட்டில் சுரேஷின் உறவினரான சாமிநாதன் என்பவருடன் ஏற்பட்ட தகராறில், சுரேஷ் அனுமதியின்றி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் சாமிநாதனைச் சுட்டாா்.
இதில், சிகிச்சை பலனின்றி சாமிநாதன் உயிரிழந்தாா். இந்த வழக்கு திருப்பத்தூா் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் இறுதி விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது.
சுரேஷின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மாவட்ட கூடுதல் நீதிபதி எஸ்.மீனாகுமாரி, சுரேசுக்கு ஆயுள் தண்டனை விதித்து ரூ.10,000 அபராதம் விதித்தாா். மேலும், அனுமதி இல்லாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் அரசு குற்றவியல் வழக்குரைஞா் பி.டி.சரவணன் ஆஜரானாா்.