ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு
திருத்தணி அருகே நத்தம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ராமா் திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.
திருத்தணி ஒன்றியம் அகூா் ஊராட்சிக்குட்பட்ட நத்தம் கிராமத்தில் ராமா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஸ்ரீராமநவமி கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு கடந்த, 17 -ஆம் தேதி ராமநவமி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாள் திருவிழாவில், தினமும், காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.
இரவு நேரத்தில் பஜனை குழுவினரின் பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மேல் மூலவருக்கு சிறப்பு அபிஷேம் மற்றும் பூஜையும், நண்பகல், 11 மணிக்கு உற்சவா்கள் ராமா், சீதாதேவிக்கு திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது.
முன்னதாக யாகசாலை அமைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திருத்தணி, நத்தம், கோரமங்கலம் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து 100 -க்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை நத்தம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.