ஆவடி: ஆவடி அருகே வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸôர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை, காந்தி 2-ஆவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சிவன் நாயர் (72). முன்னாள் ராணுவ வீரரான இவர் ஆயுர்வேத சிகிச்சையும் அளித்து வந்தார்.
இவரது மனைவி பிரசன்னாதேவி (62). இவர்களது மகன் ஹரி ஓம் ஸ்ரீ ஞாயிற்றுக்கிழமை வெளியே சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த தம்பதி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
முத்தாபுதுப்பேட்டை போலீஸôர் வழக்கு பதிந்து சிவன் நாயர் வீட்டில் கிடந்த கைப்பேசியை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது, அந்த கைப்பேசியானது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் (20) என்பவருடையதும், அவர் வளசரவாக்கத்தில் உள்ள கடையில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் அவரை நள்ளிரவில் பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். சிவன் நாயரிடம் வந்து மருத்துவ சிகிச்சை பெற்றபோது, அவரிடம் மகேஷ் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதையடுத்து, மகேஷ் அனுமதியின்றி அடிக்கடி அவரது வீட்டுக்குள் வந்து செல்வாராம்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மகேஷ், சிவன் நாயர் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதைத் தடுக்க முயன்ற பிரசன்னாதேவியைக் கத்தியால் கழுத்தை அறுத்து மகேஷ் கொலை செய்துள்ளார். மேலும், சப்தம் கேட்டு ஓடி வந்த சிவன் நாயரையும் கழுத்தை அறுத்து கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸôர் மகேஷை திங்கள்கிழமை கைது செய்தனர்.