திருவண்ணாமலை அருகே முறையான மருத்துவம் படிக்காமல் அலோபதி மருத்துவம் பார்த்து வந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலையை அடுத்த இனாம்காரியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி மனைவி மஞ்சுளா (36). இதே பகுதியில் மருந்துக் கடை நடத்தி வந்தார். இவர், தனது கடைக்கு வரும் நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவம் பார்த்து வந்தாராம்.
முறையான மருத்துவம் படிக்காமல் மஞ்சுளா சிகிச்சை அளிப்பது குறித்து நலப்பணிகள் இணை இயக்குநர் நவநீதம் தனலட்சுமிக்கு புகார்கள் சென்றன. இந்நிலையில், மஞ்சுளாவின் மருந்துக் கடையில் நவநீதம் தனலட்சுமி வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது, மஞ்சுளா நோயாளிகளுக்கு அலோபதி மருத்தும் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரைப் பிடித்து திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் நவநீதம் தனலட்சுமி ஒப்படைத்தார். போலீஸார் மஞ்சுளாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.