ஆரணி செல்லியம்மன் கோயிலில் சனிக்கிழமை இரவு புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் ராஜாஜி தெருவில் அமைந்துள்ள செல்லியம்ன் கோயிலில் வெள்ளிக்கிழமை கூழ்வார்த்தல் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, கமண்டல நாகநதிக்கரையில் அமைந்துள்ள கங்கையம்மன் கோயிலில் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து, அந்தக் கோயிலில் இருந்து பம்பை, சிலம்பாட்டத்துடன் பால்குடம், அக்னி கரக ஊர்வலம் புறப்பட்டு செல்லியம்மன் கோயிலை வந்தடைந்தது. பின்னர், அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, சனிக்கிழமை இரவு புஷ்ப பல்லக்கு நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு நாகம் மேல் அமர்ந்திருப்பது போன்ற அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அம்மனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
மேலும், கோயிலில் 108 குத்துவிளக்குப் பூஜை, வடாத்தி உத்ஸவம் ஆகியவையும் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஸ்ரீசெல்லியம்மன் ஆலய விழாக் குழுவினர் மற்றும் ஆரணிப்பாளையம் பகுதி மக்கள் செய்திருந்தனர்.