வேட்டவலம் திரெளபதியம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பழைமையான இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் அக்னி வசந்த விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு விழாவுக்கான காப்பு கட்டும் விழா கடந்த ஜூன் 23-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, மகாபாரத தொடர் சொற்பொழிவு, அம்மன் கோயில் சுற்றுப் பாதை வீதியுலா வரும் நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக 10 நாள் பிரம்மோத்ஸவம் நடைபெறுவது வழக்கம்.
கொடியேற்றத்துடன் தொடக்கம்: அதன்படி, திங்கள்கிழமை காலை 9 மணிக்கு அக்னி வசந்த விழாவின் 10 நாள் பிரம்மோத்ஸவத்துக்கான கொடியேற்றம் நடைபெற்றது. மாலை 7 மணிக்கு காந்தி சிலையில் இருந்து துளுவ வேளாளர் சமுதாயத்தினர் வாணவேடிக்கை முழங்க சீர்வரிசைப் பொருள்களை ஊர்வலமாக திரெளபதியம்மன் கோயிலுக்கு எடுத்துச் சென்று சிறப்புப் பூஜை செய்தனர்.
இதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட இந்திர விமானத்தில் அர்ஜுனர், திரெளபதியம்மன் மாட வீதியுலா வந்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
துரியோதனன் படுகளம்: வரும் 23-ஆம் தேதி துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.