செய்யாறு அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர்.
ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் கொளத்துமேட்டு தெருவைச் சேர்ந்தவர் செல்வமணி (38). இவரது மனைவி சுமித்ரா (34), மகள் சுவேதா(7). இவர்கள் மூவரும் கிராமத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் செய்யாறு - ஆரணி சாலையில் அருகாவூர் கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, செய்யாறை அடுத்த பெரும்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் (24), இவரது நண்பர் தேவராஜ் ஆகியோர் செய்யாறு நோக்கி பைக்கில் வந்துள்ளனர். அப்போது, பின்னால் வந்த கார் இவர்கள் வந்த பைக் மீது மோதியாதாகத் தெரிகிறது.
மோதிய வேகத்தில் முன்னே சென்றுகொண்டிருந்த செல்வமணி மோட்டார் சைக்கிள் மீது பிரசாந்த் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாகத் தெரிகிறது. இந்த விபத்தில் பிரசாந்த் நிகழ்விடத்திலேயே இறந்தார்.
பலத்த காயமடைந்த செல்வமணி அவரது மனைவி சுமித்ரா, மகள் சுவேதா, பிரசாந்த்துடன் வந்த தேவராஜ் ஆகியோர் உடனடியாக செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் தேவராஜ் தீவிர சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து செய்யாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்குக் காரணமானதாகக் கூறப்படும் கார் ஓட்டுநரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.