செய்யாறை அடுத்த கொருக்காத்தூர் கிராமத்தில் மலேரியா காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் பழனி தலைமை வகித்தார். கொருக்காத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை இ.கோமதி, சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.இளங்கோ, மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழிப்புணர்வு ஊர்வலம், கொருக்காத்தூர் பஜார் வீதி, அண்ணா, வ.ஊ.சி, திருவிக ஆகிய தெருக்கள் வழியாகச்
சென்றது.
ஊர்வலத்தில் பங்கேற்ற கொருக்காத்தூர் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், களப் பணியாளர்கள், கிராம மக்கள் உள்ளிட்டோர் கொசுக்கள் மூலம் பரவும் மலேரியா, டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துதல், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருத்தல், கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகளைப் போடுவதைத் தவிர்த்தல் குறித்து விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியபடி சென்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை செய்யாறு வட்டாரச் சுகாதார ஆய்வாளர்கள் கே.ராஜவேல், இ.ஆனந்தன், இ.சேகர், நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தினர் செய்திருந்தனர்.