திருவண்ணாமலையில் வெயிலின் தாக்கத்தால் ஏ.டி.எம். மையக் காவலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
திருவண்ணாமலை, மத்தலாங்குளத் தெருவில், பெரியார் சிலை அருகே ஐ.டி.பி.ஐ., வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தவர் எம்.நடராஜன் (62). இவர், புதன்கிழமை ஏ.டி.எம். மையத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதைக் கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
வெயில் கொடுமை தாங்காமல் அவர் மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, திருவண்ணாமலையில் வெயில் கொடுமையால் மயங்கி விழுந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.