செங்கம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி, காதல் ஜோடி திங்கள்கிழமை தஞ்சமடைந்தனர்.
செங்கத்தை அடுத்த செ.சொர்ப்பனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ராஜேஸ்வரி (19). இவர், செவிலியர் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த 8-ஆம் தேதியில் இருந்து ராஜேஸ்வரியைக் காணவில்லை என அவரது தந்தை பாய்ச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனிடையே, அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கும் ராஜேஸ்வரிக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருப்பதியில்
திருமணம் செய்து கொண்டு, செங்கம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். மேலும், இதுகுறித்து செங்கம் டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தியிடம் ராஜேஸ்வரி தெரிவித்ததாவது: நாங்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். எங்கள் திருமணத்துக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். எனவே, எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். அதன் அடிப்படையில், போலீஸார் அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.