திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 484 மனுக்கள் வரப் பெற்றன.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பொதுமக்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து முதியோர் உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, வங்கிக் கடனுதவி, திருமண உதவித் தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, சாதிச் சான்று, வேலைவாய்ப்பு, பசுமை வீடுகள், விதவை உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 484 மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார். முன்னதாக, மனுக்களை அளிக்க வந்த மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மதிய உணவை ஆட்சியர் வழங்கினார்.
நலத் திட்ட உதவிகள் அளிப்பு: பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில், ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிள், திருமண உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2 பேருக்கு தாலிக்குத் தங்கம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்.
மேலும், ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சக்கர நாற்காலி கூடைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்று 2-ஆம் பரிசாக வெள்ளிப் பதக்கம், கோப்பையை வென்று வந்த மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு நிர்வாகி ஜெகநாதன் கோப்பையை மாவட்ட ஆட்சியரிடம் காட்டி வாழ்த்துப் பெற்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் க.லோகநாயகி, மகளிர் திட்ட அலுவலர் ஜெயசுதா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் பி.குணசேகரன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி உள்பட அனைத்துத் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.