திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தேமுதிக மாநில அவைத் தலைவர் ஆர்.மோகன்ராஜ் வலியுறுத்தினார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் பொதுமக்களுக்கு தேமுதிக சார்பில், பழம், ரொட்டி, பிஸ்கெட் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தேமுதிக மாநில அவைத் தலைவர் ஆர்.மோகன்ராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பழம், ரொட்டி, பிஸ்கெட்டுகளை வழங்கி ஆறுதல் கூறினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் இல்லை. இதனால் டெங்கு காய்ச்சலால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எனவே, இங்கு காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை உடனடியாக அரசு நிரப்ப வேண்டும். கொசு ஒழிப்புத் திட்டத்தில் தமிழகத்தில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது என்றார். பேட்டியின்போது, தேமுதிக மாவட்டச் செயலர் சி.குமரன், பொருளாளர் நிர்மல்குமார், மாவட்ட துணைச் செயலர் தமிழன்னை பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
நிலவேம்புக் குடிநீர் விநியோகம்: ஆரணியில் தேமுதிக சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் அந்தக் கட்சியின் அவைத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.மோகன்ராஜ் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்டச் செயலர் கோபிநாதன், மாவட்டப் பொருளாளர் ஜான்பாஷா, நகரச் செயலர் சுந்தர்ராஜன், வழக்குரைஞர் திருஞானம், ஒன்றியச் செயலர் சரவணன், முன்னாள் மாவட்டச் செயலர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.