சேத்துப்பட்டை அடுத்த கோட்டுப்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள பரதேசி ஆறுமுகசாமி கோயிலில்182-ஆவது குருபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, ஏராளமான பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி மண்சோறு சாப்பிட்டனர்.
கோட்டுப்பாக்கம் ஊராட்சியில் 200 ஆண்டுகளுக்கு முன்பு பரதேசி ஆறுமுகசாமி வாழ்ந்து வந்தார். இவர், கடந்த 182 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவசமாதி அடைந்தார். அப்போது, தனது குருபூஜை விழாவான ஆடி அமாவாசை அன்று குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் விரதமிருந்து மண்சோறு சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும், செல்வம் பெருகும் என்றும் பக்தர்களிடம் பரதேசி ஆறுமுகசாமி கூறினாராம்.
இதைத் தொடர்ந்து, பரதேசி ஆறுமுகசாமிக்கு அவரது சீடர்கள் கோயில் கட்டியதுடன், அவருக்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசையின்போது, குருபூஜை விழா நடத்தி வருகின்றனர்.
நிகழாண்டு பரதேசி ஆறுமுகசாமியின் 182-ஆவது குருபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, பரதேசி ஆறுமுகசாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றன. இதில், குழந்தை பாக்கியம் இல்லாத ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, குழந்தை பாக்கியம் வேண்டி மண்சோறு சாப்பிட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக, இந்த விழாவில் கலந்து கொண்டு குழந்தை பெற்ற பெண்கள், குழந்தையின் எடைக்கு எடை பொருள், பணம் அளித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை விழாக் குழுவினர், பொதுமக்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.