திமுக தலைவர் மு.கருணாநிதி காலமானதையொட்டி, செய்யாறு, ஆரணி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நினைவஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.
செய்யாறில் நடைபெற்ற ஊர்வலத்தில் செய்யாறு தொகுதி திமுக, காங்கிரஸ், திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், தமுமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் மற்றும் வியாபாரிகள் உள்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருவோத்தூர் பெரியார் சிலை அருகில் தொடங்கிய அமைதி ஊர்வலம், சந்தை, காந்தி சாலை, பேருந்து நிலையம் வழியாக அண்ணா சிலை வரை சென்று முடிவடைந்தது.
அந்தப் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மு.கருணாநிதியின் உருவப் படத்துக்கு திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
ஆரணியில்...: ஆரணியில்
திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலர் ஆர்.சிவானந்தம் தலைமையில் நினைவஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.
அண்ணா சிலை அருகில் தொடங்கிய நினைவஞ்சலி ஊர்வலம், சந்தை சாலை, பழைய பேருந்து நிலையம், பெரியகடை வீதி, எஸ்.எம் சாலை வழியாக மீண்டும் அண்ணா சிலை அருகில் வந்து நிறைவடைந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின்
உருவப் படத்துக்கு திமுகவினர் மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ தயாநிதி, நகரச் செயலர் ஏ.சி.மணி, ஒன்றியச் செயலர்கள் தட்சிணாமூர்த்தி, அன்பழகன், வெள்ளை கணேசன், சுந்தர், பேரூராட்சிச் செயலர் கோவர்தனன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஜி.வெங்கடேசன், மாவட்டப் பிரதிநிதி கே.டி.ராஜேந்திரன், புஷ்பராஜ், ரஞ்சித், குட்டி என்கிற நடராஜன், மணிமாறன், வழக்குரைஞர் ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.