திருவண்ணாமலை நகரில் உரிய அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைப்பவர்கள் கைது செய்யப்படுவர் என்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி எச்சரித்தார்.
திருவண்ணாமலை நகரின் மையப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பள்ளி மாணவர்களின் கவனம் சிதறும் வகையிலும் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான ஜி.மகிழேந்தி, சனிக்கிழமை காலையில் திருவண்ணாமலை - வேலூர் சாலையில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை அகற்றினார்.
அப்போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) மு.பிரதாப், நகர டிஎஸ்பி அண்ணாதுரை மற்றும் போலீஸார் உடனிருந்தனர். பின்னர், நீதிபதி ஜி.மகிழேந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஆன்மிகத் நகரான திருவண்ணாமலைக்கு வரும் கிரிவல பக்தர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கவனம் சிதறும் வகையில், விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற விளம்பரப் பதாகைகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, உரிய அனுமதியின்றி விளம்பரப் பதாகைகளை வைப்போர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்படுவர் என்றார்.