சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் 40 நாள்கள் தவக்காலத்தின் தொடக்க நாளான திருநீற்று புதன் எனும் சாம்பல் புதன் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் தவக்காலமாக 40 நாள்கள் கடைப்பிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாளை புனித வெள்ளியாகவும், 3-ஆம் நாள் உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாகவும் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
கிறிஸ்தவர்களின் தவக்கால முதல் நாள் சாம்பல் புதன் என்றழைக்கப்படுகிறது. இதையொட்டி, சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டுத் திருப்பலியில் பங்குதந்தை விக்டர் இன்பராஜ், குருத்தோலையை எரித்து சாம்பலாக்கி கிறிஸ்தவர்களின் நெற்றியில் பூசினார்.
இதில் சேத்துப்பட்டு, லூர்துநகர், நிர்மலாநகர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.