தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவற்றால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு மாவட்ட கல்வித் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
தியாகி நா.அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு வருமான வரித் துறை உதவி ஆணையர் மணிமொழியன் தலைமை வகித்தார். பயிற்சி மைய ஆசிரியர்கள் சாந்தகுமார், ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பயிற்சி வகுப்புகளைத் தொடக்கி வைத்துப் பேசியதாவது: இளைஞர்கள் நினைத்தால் 2020-ஆம் ஆண்டு இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற முடியும். இளைஞர்கள் அனைவரும் வேலை கொடுக்கும் இளைஞர்களாக உருவாக வேண்டும்.
இலவசப் பயிற்சி முகாமில் பங்கேற்கும் இளைஞர்கள், போட்டித் தேர்வில் வெற்றி பெற்றதும் தங்கள் கிராமங்களில் உள்ள இளைஞர்களை போட்டித் தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும். உயர்ந்த நோக்கம், நல்ல கனவுகளுடன் நீங்கள் உழைக்க வேண்டும் என்றார். பயிற்சி முகாமில் ஏராளமான தேர்வர்கள் கலந்து கொண்டனர்.