வந்தவாசி அருகே ஏற்பட்ட தகராறு தொடர்பாக 3 சகோதரர்கள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வந்தவாசியை அடுத்த கோழிப்புலியூர் கூட்டுச் சாலையைச் சேர்ந்தவர் சங்கர் (45). இதே பகுதியைச் சேர்ந்தவர் இவரது தம்பி தட்சணாமூர்த்தி (42). இருவருக்கும் அடுத்தடுத்து வீட்டு மனைகள் உள்ளன.
தமிழக அரசின் பசுமை வீடு கட்டும் திட்டத்தின்கீழ் சங்கர் வீடு கட்டி வருகிறாராம். இந்த நிலையில், தட்சணாமூர்த்தியும் பசுமை திட்ட வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டுவதற்காக கடந்த 7-ஆம் தேதி அளவீடு செய்தாராம். அப்போது, தனது இடத்தையும் சேர்த்து அளவீடு செய்வதாக சங்கர் ஆட்சேபம் தெரிவித்தாராம். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் காயமடைந்த சங்கர், தட்சணாமூர்த்தி, இவர்களின் தம்பி விஜயன் (37), சங்கரின் மனைவி குப்பு (35) ஆகிய 4 பேரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தட்சணாமூர்த்தி அளித்த புகாரின்பேரில், சங்கர், குப்பு ஆகியோர் மீதும், குப்பு அளித்த புகாரின்பேரில் தட்சணாமூர்த்தி, விஜயன் ஆகியோர் மீதும் வழக்குப் பதிந்த வடவணக்கம்பாடி போலீஸார், 4 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.