ஆரணி புதிய பேருந்து நிலையப் பகுதியில் அண்மையில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
ஆரணியில் ஏற்கெனவே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சில தினங்களுக்கு முன்பு ஆரணி புதிய பேருந்து நிலையத்தில் கூடுதலாக அம்மா உணவகத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
இந்த நிலையில், அந்த உணவகத்துக்கு அமைச்சர் ஞாயிற்றுகிழமை திடீரென சென்று ஆய்வு செய்தார். அப்போது, ஏற்கெனவே உள்ள அம்மா உணவகத்திலிந்து உணவுகளை எடுத்து வருவதற்கு மூன்று சக்கர வாகனத்தை உடனே வாங்க உத்தரவிட்டார். மேலும், உணவை சாப்பிட்டு பார்த்து தரத்தை அறிந்தார்.
தொடர்ந்து, தரமான உணவுகளை தயார் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என அங்கு பணிபுரிந்து வரும் பெண்களிடம் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அறிவுறுத்தினார். அப்போது, அரசு வழக்குரைஞர் க.சங்கர், நகர ஜெயலலிதா பேரவைச் செயலர் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலர் பிஆர்ஜி.சேகர், பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.