தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றில் இருந்து செவ்வாய்க்கிழமை மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 4 டிராக்டர்களை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி பறிமுதல் செய்து, போலீஸில் ஒப்படைத்தார்.
தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, தண்டராம்பட்டு வட்டாட்சியர் சுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் வாழவச்சனூர் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தென்பெண்ணை ஆற்றில் டிராக்டர்களில் மணல் ஏற்றிக்கொண்டிருந்த கும்பலை அதிகாரிகள் மடக்கிப் பிடிக்க முயன்றனர். ஆனால், அதிகாரிகளைப் பார்த்ததும் 4 பேர் டிராக்டர்களை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
இதையடுத்து, உரிய அனுமதியின்றி மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட 4 டிராக்டர்களை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்து, வானாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து தப்பிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.