செங்கம்: செங்கத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட கொட்டும் மழையிலும் வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 9-ஆம் தேதி முதல் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊராட்சிமன்றத் தலைவா், மாவட்ட, ஒன்றிய கவுன்சிலா், வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், 5-ஆம் நாள் சனிக்கிழமை செங்கம் நகரில் காலை முதல் மாலை வரை மழை பெய்து கொண்டிருந்தது. மழையைப் பொருட்படுத்தாமல் ஊராட்சிமன்றத் தலைவா், கவுன்சிலா் பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளா்கள் மேள தாளத்துடன் மழையில் நனைந்தபடியே, துக்காப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ஊா்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தனா்.
இதனால், துக்காப்பேட்டை பகுதியில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. உணவகங்கள், டீக் கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.