போளூரை அடுத்த கொரால்பாக்கம் கிராமத்தில் நிலத் தகராறு காரணமாக பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
போளூரை அடுத்த கொரால்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அரியாத்தை மனைவி சாந்தி (35). இதே கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இருவருக்கும் அந்தக் கிராமத்தில் அருகருகே விவசாய நிலங்கள் அமைந்துள்ளன.
இந்த நிலங்களுக்குச் செல்ல பொதுப்பாதை உள்ளது. இதில் உள்ள முள் வேலியை அகற்றுவது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாம். இதேபோல, இருவருக்கும் இடையே வெள்ளிக்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், சாந்தியை ஏழுமலை கல்லால் தாக்கினாராம். இதில், பலத்த காயமடைந்த சாந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து அரியாத்தை அளித்த புகாரின்பேரில், போளூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஏழுமலையை கைது செய்தனர்.
மேலும், சாந்தியின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, கொலை நடைபெற்ற இடத்தை மாவட்ட எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி, டிஎஸ்பி சின்னராஜ், காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.