பேருந்தில் தவறவிட்ட பொருள்களை உரியவரிடம் ஒப்படைத்த போலீஸார்
போளூரில் அரசுப் பேருந்தில் தவறவிட்டப்பட்ட ஆயுள் காப்பீட்டுப் பத்திரம், காசோலைப் புத்தகம், வங்கிப் புத்தகம் உள்ளிட்டவற்றை காவல் உதவி ஆய்வாளர் தயாளன் உரியவரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தார்.
கடலூர் காமராஜ் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர், கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி கடலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு மருத்துவச் சிகிச்சைக்காக அரசுப் பேருந்தில் வந்துள்ளார். திருவண்ணாமலைக்கு சந்திரசேகரன் வந்தபோது, பேருந்திலேயே தான் கொண்டு வந்த பையை தவறவிட்டுள்ளார்.
பின்னர், அவர் சிகிச்சை பெறாமலேயே கடலூருக்கு திரும்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து சந்திரசேகரன் எந்தக் காவல் நிலையத்திலும் புகார் அளிக்காத நிலையில், கடந்த ஜனவரி 4-ஆம் தேதி மரணமடைந்தார்.
இதனிடையே, போளூர் அரசுப் போக்குவரத்துப் பணிமனையைச் சேர்ந்த நடத்துநர், பேருந்தில் சந்திரசேகரன் தவறவிட்ட பையை பணிமனையில் கொடுத்துள்ளார். பின்னர், அந்தப் பை போளூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், மரணமடைந்த சந்திரசேகரனின் அண்ணன் கிருஷ்ணனை தொடர்புகொண்ட போளூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தயாளன், அவரிடம் சந்திரசேகரன் தவறவிட்ட ஆயுள் காப்பீட்டுப் பத்திரம், காசோலைப் புத்தகம், வங்கிப் புத்தகம், சமையல் எரிவாயு இணைப்பு புத்தகம் உள்ளிட்ட பொருள்களை வழங்கினார். அப்போது, காவலர்கள் சரவணன், கருப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.