திருவண்ணாமலை அருகே காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்த முயன்ற இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை தாலுகா காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், முரளிதரன் மற்றும் போலீஸார் செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலை - வேலூர் சாலையில் தீபம் நகர் சந்திப்புப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, இளைஞர் ஒருவர் தனது பைக்கை நடுரோட்டில் நிறுத்திவிட்டு, அந்த வழியே சென்றவர்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தாராம்.
அந்த இளைஞரை சிறப்பு உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் பிடிக்க முயன்றபோது, அவரை அந்த இளைஞர் கத்தியால் குத்த முயன்றதாகத் தெரிகிறது. மேலும், பாலகிருஷ்ணனை கீழே தள்ளிவிட்டு, அந்த இளைஞர் பைக்கில் தப்பிச் சென்றுவிட்டாராம்.
விசாரணையில், தப்பிச் சென்றவர் திருவண்ணாமலை - போளூர் சாலையைச் சேர்ந்த அர்னால்டு (எ) அருண்குமார் என்பதும், அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து, தப்பிச் சென்ற அருண்குமாரை தேடி வருகின்றனர்.