வந்தவாசி அருகே நிகழ்ந்த இரு வேறு விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர்.
வந்தவாசியை அடுத்த வங்காரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காசி (65). இவர், கடந்த திங்கள்கிழமை வங்காரத்திலிருந்து மாம்பட்டு கூட்டுச்சாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
ஆவனவாடி கிராம சாலை வழியாக நடந்து சென்றபோது, இவருக்கு பின்னால் வந்த பைக் இவர் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த காசி, வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட காசி, அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், பொன்னூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
மற்றொரு சம்பவம்: வந்தவாசியை அடுத்த மேல்மா கிராமத்தைச் சேர்ந்த பாரிமோகன் மகன் கார்த்தி (26). இவர், செய்யாறு சிப்காட் தொழில்பேட்டையில் வேலை செய்து வந்தார்.
கார்த்தி கடந்த திங்கள்கிழமை வீரம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் வீரம்பாக்கம் பயணியர் விடுதி அருகே வந்தபோது, எதிரே வந்த கார் கார்த்தியின் பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த கார்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், வந்தவாசி வடக்கு போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.