திருவண்ணாமலையில் சாதுக்கள், திருநங்கைகளிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள சமுதாயக் கூடத்தில் திருநங்கைகளிடமும், திருவண்ணாமலை கிரிவலப் பாதை திருநேர் அண்ணாமலை கோயில் அருகே சாதுக்கள், பொதுமக்களிடமும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகளுக்கு கோட்டாட்சியர் ஸ்ரீதேவி தலைமை வகித்தார்.
மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருநங்கைகள், சாதுக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக பயன்படுத்தப்படும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் கருவியின் பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 354 சாதுக்கள், 76 திருநங்கைகள் வாக்காளர்களாக உள்ளனர்.