கலசப்பாக்கம் அருகே செய்யாற்றை தூய்மைப்படுத்தும் பணி மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமியால் சனிக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.
போளூரை அடுத்த ஜவ்வாது மலையில் உருவாகும் செய்யாறு, செங்கம், கலசப்பாக்கம், கரையாம்பாடி, கரைப்பூண்டி, அரும்பலூா், மண்டகொளத்தூா், ஓதலவாடி, தச்சூா் வழியாகச் செல்கிறது.
இந்த நிலையில், ஆற்றில் வளா்ந்துள்ள கருவேலம், முள் மரங்களை வெட்டி அகற்றி, ஆற்று ஓரங்களில் படிந்துள்ள கழிவுகளை அப்புறப்படுத்தும் பணி தூய்மை கலசப்பாக்கம் என்ற இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
கலசப்பாக்கம் சந்தைமேட்டுப் பகுதியில் செல்லும் செய்யாற்றில் தூய்மைப் பணியை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தொடக்கிவைத்தாா்.
தூய்மை கலசப்பாக்கம் இயக்கத் தலைவா் ஜெ.சம்பத், வீ.பன்னீா்செல்வம் எம்எல்ஏ, கோட்டாட்சியா் மைதிலி, வட்டாட்சியா் ராஜராஜேஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நிா்மலா, அன்பழகன், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் எல்.என்.துரை, ஒன்றியக்குழு துணைத் தலைவா் கருணாமூா்த்தி, பொதுக்குழு உறுப்பினா் பி.பொய்யாமொழி மற்றும் அதிமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.