ஆரணியில் மாநில அளவிலான கபடிப் போட்டியை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தார்.
ஆரணி கொசப்பாளையத்தில் எஸ்.எஸ்.கபடிக் குழு சார்பில் மாநில அளவிலான கபடிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 4-ஆம் ஆண்டாக நடைபெறும் இப்போட்டியில் திருச்சி, சென்னை, சேலம், நாமக்கல், வேலூர், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 55 அணிகள் பங்கேற்றுள்ளன.
போட்டியில், முதல் பரிசாக 8 அடி உயரம் உள்ள கோப்பையுடன் ரூ.22 ஆயிரத்து 222-ம், இரண்டாவது பரிசாக 7அடி உயரம் கொண்ட கோப்பையுடன் ரூ.15ஆயிரத்து 555-ம், மூன்றாவது பரிசாக 5 அடி உயரம் கொண்ட கோப்பையுடன் ரூ.10 ஆயிரத்து 222-ம் வழங்கப்படுகிறது. இது தவிர, 3 அடி உயர கோப்பையுடன் ரொக்கப் பரிசு 8 அணிகளுக்கு வழங்கப்படுகிறது.
போட்டியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தார். இப்போட்டி தொடர்ந்து திங்கள்கிழமையும் நடைபெறுகிறது.
போட்டி தொடக்க விழாவில் அதிமுக நகரச் செயலர் எ.அசோக்குமார், அரசு வழக்குரைஞர் க.சங்கர், மாவட்ட பால் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் பாரிபாபு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், ஆரணி பட்டு கூட்டுறவு சங்க துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி, நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் லட்சுமி சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.