புதுப்பாளையம் அகத்தீஸ்வரர் கோயிலில் திருத்தேர் பணி
செய்யாறு தொகுதி புன்னை புதுப்பாளையம் அகத்தீஸ்வரர் கோயிலில் ரூ.23.50 லட்சத்தில் திருத்தேர் கட்டும் பணியை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம் புன்னை புதுப்பாளையம் கிராமத்தில் பழைமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமான தேர் சேதமடைந்து போனது. இத்தேருக்குப் பதில் புதிய தேர் செய்து கொடுக்க தமிழக முதல்வர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஆகியோருக்கு கிராம மக்கள் கோரிக்கை மனு அனுப்பி இருந்தனர்.
கோரிக்கையை ஏற்று தமிழக அரசு புதிய தேர் வடிவத்திட ரூ.23.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து சட்டப் பேரவைக் கூட்டத்தில் அறிவித்து அதற்கான உத்தரவை பிறப்பித்தது.
அதன்படி, ரூ.23.50 லட்சத்தில் திருத்தேர் அமைக்கும் பணிக்காக பூஜை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பணியை தொடக்கிவைத்தார்.தூசி.கே.மோகன் எம்எல்ஏ, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் செந்தில்வேலன், உதவி ஆணையர் ஜான்சிராணி, ஆய்வாளர் மேகலா, பொறியாளர் ராகவன், தேர் ஸ்தபதி கஜேந்திரன், அதிமுக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.