வேட்டவலம் பேரூராட்சியில் ஒட்டுமொத்த தூய்மைப் பணியை செயல் அலுவலர் சுகந்தி சனிக்கிழமை தொடக்கிவைத்தார்.
இதில், வேட்டவலம், புதுப்பாளையம், செங்கம், கீழ்பென்னாத்தூர் ஆகிய பேரூராட்சிகளைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை சரிசெய்தல், சாலைகளின் இரு புறங்களிலும் உள்ள புல், பூண்டுகளை அகற்றுதல், குடிநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்தல், டெங்கு நோய்த் தடுப்பு நடவடிக்கையாக தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் அபேட் மருந்து தெளித்தல், வீடுகளில் உள்ள தேவையற்ற பழைய பொருள்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியின்போது, பேரூராட்சி இளநிலை உதவியாளர் பன்னீர்செல்வம், வரி தண்டலர் வசந்தன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் செல்வன், ராஜா, முருகன், வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.