திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனம், தமிழ்நாடு இளங்குழந்தைப் பராமரிப்பு சேவைக்கான கூட்டமைப்பு இணைந்து மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி புதன்கிழமை விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டன.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு
ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் 100 சதவீதம் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனம், தமிழ்நாடு இளங்குழந்தைப் பராமரிப்பு சேவைக்கான கூட்டமைப்பு சார்பில் விழிப்புணர்வுப் பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணா சாலையில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வுப் பிரசாரத்துக்கு சினம் தொண்டு நிறுவன இயக்குநர் இராம.பெருமாள் தலைமை வகித்தார்.
தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் லட்சுமணன், சேகர், பாலசுப்பிரமணியன், புதிய பார்வை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை, தண்டாரம்பட்டு, சாத்தனூர், செங்கம், புதுப்பாளையம், கலசப்பாக்கம், மங்கலம், கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள், வியாபாரிகளிடம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும், வேன் பிரசாரம் மூலமும் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், சினம் தொண்டு நிறுவனப் பணியாளர் அசோக்குமார் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.