சேத்துப்பட்டு அருகேயுள்ள தேவிகாபுரம் அரசு மகளிர் உயர் நிலைப் பள்ளியில் மாணவிகள் சேர்க்கை விழா மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பள்ளியில் தமிழ்வழி மற்றும் ஆங்கிலவழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த நிலையில், வரும் கல்வியாண்டுக்கான 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை மாணவிகள் சேர்க்கை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மேலும், கடந்த பல ஆண்டுகளாக இப்பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவிகள் தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகின்றனர். இதனால் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.
விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் கலந்துகொண்டு பேசுகையில், மாணவிகளுக்கு கல்விதான் முதல் சொத்து. எனவே, படிப்பதை தவிர்த்து வேறு வேலை விஷயத்தில் கவனம் செலுத்தக்கூடாது. தொலைக்காட்சி, செல்லிடப்பேசி பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளவேண்டும். தேவையில்லாத மனக்குழப்பத்தை தவிர்க்கவேண்டும். ஒவ்வொரு மாணவரும் வீட்டில் நூலகம் அமைத்து படிக்கவேண்டும். தாய், தந்தை சொல்பேச்சு கேட்டு நடக்கவேண்டும் என்றார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் சரவணன் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.