திருவண்ணாமலை மாவட்டத்தில் கண் பார்வையற்ற 1,965 மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.
மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி என 2 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் 9 லட்சத்த 79 ஆயிரத்து 135 ஆண் வாக்காளர்கள், 10 லட்சத்து 10 ஆயிரத்து 215 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 88 பேர் என மொத்தம் 19 லட்சத்து 89 ஆயிரத்து 438 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களில் 18 ஆயிரத்து 324 மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் பார்வைக் குறைபாடுள்ள 1,965 வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவான வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பிரெய்லி எண்கள் பொறிக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள், வேட்பாளர்களின் விவரங்கள் குறித்த பிரெய்லி டம்மி வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், கண் பார்வையற்ற வனிதா, வாக்காளர்களின் வசதிக்காகப் பயன்படுத்தப்படும் பிரெய்லி டம்மி வாக்குச் சீட்டுகளில் உள்ள விவரங்களை வாசித்துக் காட்டும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். அப்போது, பார்வையற்ற மாற்றுத் திறனாளி வனிதா, பிரெய்லி டம்மி வாக்குச் சீட்டில் உள்ள விவரங்களை வாசித்துக் காட்டினார். நிகழ்ச்சியின் போது, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் எஸ்.சரவணன்
ஆகியோர் உடனிருந்தனர்.