கலசப்பாக்கத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 3-ஆவதாகப் பிறந்த பெண் குழந்தை இறந்ததாகக் கூறப்படும் நிலையில், அந்தப் பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கலசப்பாக்கத்தை அடுத்த கீழ்பாலூர் கிராமம், நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராஜா (எ) செல்வம். இவரது மனைவி விமலா. தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 3-ஆவதாக நிறைமாத கர்ப்பிணியாக இருந்த விமலாவுக்கு கடந்த 17-ஆம் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் இந்தத் தம்பதியினர் மருத்துவமனையில் இருந்து யாருக்கும் சொல்லாமல் வெளியேறி உள்ளனர்.
பின்னர், விமலா தன் தாய் வீடான கிருஷ்ணகிரி மாவட்டம், வெள்ளைக்குட்டை கிராமத்துக்குச் சென்றாராம். இதற்கிடையே, தம்பதிக்குப் பிறந்த பெண் குழந்தை இறந்துவிட்டதால், வீட்டுக்குப் பின்புறம் குழந்தையை எரித்து, சாம்பலை குட்டையில் கரைத்து விட்டனராம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமிக்கு தகவல் கிடைத்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், அந்தப் பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்டதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை போலீஸார் குழந்தையின் தந்தை ராஜா, தாய் விமலா, குழந்தையின் தாய் வழி தாத்தா, பாட்டி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து
விசாரித்து வருகின்றனர்.