ஆடிப்பூர பிரம்மோத்ஸவ நிறைவு விழாவையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை நள்ளிரவு தீமிதி திருவிழா நடைபெற்றது.
அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது.
இந்த ஆண்டுக்கான பிரம்மோத்ஸவம் ஜூலை 25-ஆம் தேதி தொடங்கியது.
அன்று முதல் தினமும் காலை, மாலை வேளைகளில் விநாயகர், பராசக்தியம்மன் உற்சவர் சுவாமிகள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அம்மனுக்கு வளைகாப்பு: பிரம்மோத்ஸவத்தின் நிறைவு நாளான சனிக்கிழமை (ஆக.3) காலை பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தக் குளத்தில் அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு வளைகாப்பு மண்டபத்தில் பராசக்தியம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெற்றது. உற்சவத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு வளையல்களை படைத்து மகிழ்ந்தனர்.
தீமிதி திருவிழா: இரவு 10 மணிக்கு பராசக்தியம்மன் வீதியுலா நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரே தீமிதி திருவிழா நடைபெற்றது. விரதம் இருந்த பக்தர்கள் தீமிதித்து வழிபட்டனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.