ஆரணியை அடுத்த தேவிகாபுரம் மற்றும் செய்யாறு அம்மன் கோயில்களில் நடைபெற்ற ஆடிப்பூர விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.
சேத்துப்பட்டு அருகேயுள்ள தேவிகாபுரத்தில் கனககிரீஸ்வரர் சமேத பெரியநாயகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற ஆடிப்பூர விழாவில், அன்று காலை விநாயகர், முருகன் வள்ளி தெய்வானை, பெரியநாயகி கனககிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
கனககிரீ ஈஸ்வரர் மலை அடிவாரத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர். பின்னர், பெரியநாயகி அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், அம்மன் வீதி உலா நடைபெற்றது.
செய்யாறில்...
ஆடிபூரத்தை முன்னிட்டு, செய்யாறு மண்டித் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில், பெண்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.