வந்தவாசியிலிருந்து செய்யாறுக்கு அரசு நகர்ப் பேருந்து சரிவர இயக்கப்படாததைக் கண்டித்து, கல்லூரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் செய்யாறில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்தக் கல்லூரியில் 2-ஆவது சுழற்சி முறை வகுப்புகளில் (ஷிப்ட்) படிக்கும் வந்தவாசி பகுதி மாணவர்கள் காலை 11.30 மணிக்கு வந்தவாசியிலிருந்து செய்யாறுக்கு இயக்கப்படும் அரசு நகர்ப் பேருந்தில் வழக்கமாக கல்லூரிக்குச் செல்வர். கடந்த சில நாள்களாக இந்தப் பேருந்து சரிவர இயக்கப்படவில்லை எனத் தெரிகிறது.இந்த நிலையில், மாணவர்கள் கல்லூரிக்குச் செல்வதற்காக வெள்ளிக்கிழமை வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் அரசு நகர்ப் பேருந்துக்காக காத்திருந்தனர். ஆனால், பேருந்து வராததால் ஆத்திரமடைந்த அவர்கள், நகர்ப் பேருந்து சரிவர இயக்கப்படாததைக் கண்டித்து, அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த வந்தவாசி தெற்கு போலீஸார், இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதை ஏற்று மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.