திருவண்ணாமலையில் பெளர்ணமியையொட்டி கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என தள்ளுவண்டி, தற்காலிக உணவகங்களில் புதன்கிழமை மாலை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருவண்ணாமலையில் புதன்கிழமை மாலை பெளர்ணமியை முன்னிட்டு, அண்ணாமலையார் உண்ணாமலையம்மனை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
இதையொட்டி, பக்தர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என நகரின் கோயில் பகுதி மற்றும் கிரிவலப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின் பேரில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார், நகர உணவுப் பாதுகாப்பு அலுவலர் கலைஷ்குமார், உணவுப் பாதுகாப்பு அலுவலர் சுப்பிரமணி மற்றும் அத்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் தள்ளுவண்டி, தற்காலிக உணவகங்கள், சிற்றுண்டிகள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இடங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பக்தர்களுக்கு தரமான உணவு வழங்கவும் உணவு வழங்கும் இடங்களை சுகாதாரமாக வைத்திருக்கவும் அதிகாரிகள் தள்ளுவண்டி மற்றும் தற்காலிக உணவக உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.