செய்யாறு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து சிகிச்சைப் பெற்று வந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
செய்யாறை அடுத்த சகாயபுரம் கிராமத்தைச் சோ்ந்த ரவி மகன் விக்னேஷ் (20). இவா்,
சென்னை அருகே சுங்குவாா்சத்திரத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகத் தெரிகிறது.
கடந்த நவ. 23- ஆம் தேதி விக்னேஷ் வீட்டில் இருந்து மோரணம் கிராமத்திற்கு பைக்கில் சென்றாா். அப்போது அங்குள்ள வளைவுப் பகுதியில் சென்றபோது நிலை தடுமாறி விழுந்ததாகத் தெரிகிறது.
இதில் பலத்த காயமடைந்த விக்னேஷை அவ்வழியாக சென்றவா்கள் மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து மோரணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.