ஆரணி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
15 சதவீத ஊதிய நிர்ணய பலனுடன் 3-ஆவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். பிஎஸ்என்எல் நிர்வாகத்தின் முன்மொழிவின்படி பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். அரசு விதிகளின்படி மட்டுமே பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து ஓய்வூதிய பங்களிப்பை பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 18 முதல் 20-ஆம் தேதி வரை நாடு முழுவதும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலை
நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக, ஆரணி பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் ஊழியர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பிஎஸ்என்எல் தேசிய சம்மேளன ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் பி.சென்னசேகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். மாவட்டச் செயலர் கே.அல்லிராஜா, மாவட்ட துணைச் செயலர் எம்.லோகநாதன், கிளைச் செயலர் ஜி.ராஜேந்திரன், கிளைத் தலைவர் எம்.பரசுராமன், கிளை துணைச் செயலர் பார்த்தீபன், காட்பாடி கிளைச் செயலர் ஜி.ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.