திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள முருகன் கோயில்களில் புதன்கிழமை கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்றது.
செங்கம் அருகே அமைந்துள்ள மண்மலை முருகன் கோயிலில் கிருத்திகை விழா நடைபெற்றது. விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை மாலை சிறப்பு அலங்காரத்தில் வாணவேடிக்கை, மேளதாளங்களுடன் முருகன் சுவாமி வீதியுலா வந்தார். தொடர்ந்து, புதன்கிழமை அதிகாலை சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.
2 நாள் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட பக்தர்களுக்கு செங்கம் கிருத்திகை வழிபாட்டு மன்றம் சார்பில் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது.
மங்கலம்: திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாலமுருகன் கோயிலில் 46-ஆவது ஆண்டு கிருத்திகை தேர்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, கடந்த 7-ஆம் தேதி கந்தபுராண சிறப்புச் சொற்பொழிவு, சக்தி கலசம் வைத்தல், காப்பு கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து, புதன்கிழமை அதிகாலை பால்குட அபிஷேகம், செக்கு இழுத்தல், கொதிக்கும் எண்ணெயில் கையால் வடை எடுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
பிற்பகலில் விரதம் இருந்து வந்த பக்தர்கள் வேல், அலகு குத்தியும், காவடி எடுத்தும் நடனமாடி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மாலையில் வள்ளித் திருமணம், இரவு வாணவேடிக்கை, சுவாமி வீதியுலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை விழாக் குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.