திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே மின் வாரியத்தில் நூதன முறையில் ரூ.84 லட்சத்தை கையாடல் செய்த கணக்கீட்டாளரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
ஆரணி சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (40). இவர், ஆரணியை அடுத்த களம்பூரில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டாளர், வருவாய் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
மணிகண்டன் கடந்த 2013 முதல் 2018-ஆம் ஆண்டு வரை மின் வாரியத்துக்கு உள்ளாட்சி அமைப்புகள் செலுத்திய
ரூ.84 லட்சத்து 20 ஆயிரத்து 627-ஐ நூதன முறையில் கையாடல் செய்துள்ளார். இந்த கையாடல் சம்பவம் கடந்த மாதம் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, களம்பூர் மின் வாரிய இளநிலைப் பொறியாளர் சிவக்குமார், திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தியிடம் அண்மையில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரிக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இதையடுத்து, மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, மணிகண்டனை வியாழக்கிழமை கைது செய்தனர்.