திருவண்ணாமலை ஜவுளி கடையில் 450 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
திருவண்ணாமலையில் பிரபல ஜவுளிக் கடையிலிருந்து தடை செய்யப்பட்ட 450 கிலோ பிளாஸ்டிக் பைகளை நகராட்சி அலுவலர்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், திருவண்ணாமலை நகரில் தேரடி தெரு மற்றும் பல இடங்களில் துணிக் கடை நடத்தி வரும் பிரபல தனியார் துணிக் கடையில் தடை செய்யப்பட்ட நெய்யாத பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு வந்த புகாரை அடுத்து, திருவண்ணாமலை நகராட்சி அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில், தடை செய்யப்பட்ட ரூ.50 ஆயிரத்திலான நெய்யாத 450 கிலோ பிளாஸ்டிக் பைகளை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதனிடையே, திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.