பெரணமல்லூர் அருகே தனியார் நிலத்தில் இளைஞர் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரணமல்லூர் அருகே அரியபாடி பகுதியில் உள்ள முனுசாமி என்பவர் நிலத்தில் திங்கள்கிழமை அதிகாலை இளைஞர் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெரணமல்லூர் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடம் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்டுக் கிடந்தவர் பெரணமல்லூரைச் சேர்ந்த பாண்டியன் மகன் வெங்கடேசன் (29) (படம்) என்பதும், ஓட்டுநராக இருந்து வந்ததும் தெரிய வந்தது.
மேலும், வெங்கடேசன் ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனை அறிந்த பெற்றோர்கள், உறவினர்கள் இவரைத் தேடி வந்த தகவல் போலீஸாருக்கு தெரியவந்தது.
இதனால் இறந்தவர் வெங்கடேசன் என்று உறுதி செய்தனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு செய்யாறு டிஎஸ்பி ஜெபராஜ் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும், மோப்ப நாய் பரிசோதனை நடைபெற்றது.
விரல் ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். போலீஸார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.