வந்தவாசி அருகே சாலை மறியலில் ஈடுபட்டதாக 55 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
வந்தவாசி அருகே முதலூர் கிராமத்திலிருந்து ஸ்ரீரங்கராஜபுரம், கண்டையநல்லூர், பெரப்பணங்காடு, அகரம் வழியாக நெல்லியாங்குளம் வரை சுமார் 6 கி.மீ. தொலைவுக்கு சுமார் ரூ.3 கோடியில் 16 சிறு பாலங்களுடன் கூடிய தார்ச்சாலை அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் முதல்கட்டமாக, சிறு பாலங்கள் அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால், இதற்கான மாற்றுப்பாதை சரிவர அமைக்கப்படவில்லையாம்.
இந்த நிலையில், சிறு பாலங்கள் தரமற்று அமைக்கப்படுவதாக வந்த புகாரின்பேரில், அதிகாரிகள் ஆய்வு செய்ததை அடுத்து, நிறுத்தப்பட்ட பணிகள் அதன் பின்னர் தொடங்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், சாலைப் பணிகளை விரைவாக முடிக்கக் கோரி, வந்தவாசி - திண்டிவனம் சாலையில் தெள்ளாறு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், அதிகாரிகள் மற்றும் போலீஸார் சமரசம் செய்ததன்பேரில், கிராம மக்கள் மறியலைக் கைவிட்டனர். இந்த நிலையில், சாலை மறியலில் ஈடுபட்டதாக 20 பெண்கள் உள்ளிட்ட 55 பேர் மீது தெள்ளாறு போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.