செங்கம் அருகே ஆண்டிப்பட்டி கிராமத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கக் கோரி, காலிக் குடங்களுடன் அந்தக் கிராம பெண்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது ஆண்டிப்பட்டி கிராம ஊராட்சி. இந்த ஊராட்சி நிர்வாகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த 5 மாதங்களாக குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால் அதிருப்தியடைந்த பெண்கள் உள்ளிட்ட அந்தக் கிராம மக்கள், காலிக் குடங்களுடன் செங்கம் - மணிக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த மேல்செங்கம் போலீஸார் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியலால் செங்கம் - மணிக்கல் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.