பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 200-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை தர்னா போரட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்னா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு கூட்டமைப்பு நிர்வாகியும், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மூத்த கண் மருத்துவருமான பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
கூட்டமைப்பு நிர்வாகியும், பொது மருத்துவருமான சோஜி, கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
போராட்டத்தின்போது, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும். நோயாளிகளின் சேவைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும்.
தமிழக சுகாதாரத்தின் அடித்தளம் காக்கப்பட வேண்டுமெனில், அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மற்ற ஊர்களில்...: இதேபோல, செய்யாறு அரசு தலைமை மருத்துவமனை, போளூர், செங்கம், தண்டராம்பட்டு பகுதிகளில் உள்ள தாலுகா மருத்துவமனைகளிலும் அந்தந்தப் பகுதி மருத்துவர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தர்னா போராட்டங்களில் 200-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.