திருவண்ணாமலையில் மனைவியை மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனையுடன், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து திருவண்ணாமலை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி அம்மு (20). இவர்கள் திருவண்ணாமலை அண்ணா நகர், மாரியம்மன் கோயில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ராஜா அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதனால் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாம்.
இதேபோல, கடந்த 2008 மே 26-ஆம் தேதி தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ராஜா, மனைவி அம்மு மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தாராம். இதனால் பலத்த தீக்காயமடைந்த அம்மு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீஸார் வழக்குப் பதிந்து ராஜாவை கைது செய்தனர். இந்த வழக்கு திருவண்ணாமலை மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வெள்ளிக்கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயராணி, குற்றஞ்சாட்டப்பட்ட ராஜாவுக்கு ஆயுள் தண்டனையுடன், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை கட்டத் தவறினால், மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.