செய்யாறு அருகே எட்டு வழிச் சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் கருப்புக் கொடியுடன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் பாண்டியராஜன் எட்டு வழிச் சாலைத் திட்டத்தை ஆதரித்துப் பேசியதாகத் தெரிகிறது.
அமைச்சர் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தும், எட்டு வழிச் சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் எட்டு வழிச் சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் கையில் கருப்புக் கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நம்பேடு பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திருவண்ணாமலை மாவட்டக் குழு உறுப்பினர் நம்பேடு சேகர் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, சென்னை - சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் காட்டும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இதில், எட்டு வழிச் சாலை எதிர்ப்பு இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் அத்திப்பாடி அருள், மாணவர் இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் மண்மலை சிவா, இணை ஒருங்கிணைப்பாளர் எருமைவெட்டி தேவன் மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.